Friday 22 August 2008

ஸ்ரீஜெயந்தி ...

பொட்டுக்கடலை சீடை
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய், தேங்காய்துருவல், எள்ளு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் அரிசி மாவை கை பொறுக்கும் சூட்டில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன், பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், தேங்காய் துருவல், எள்ளு, உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசறி, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சிறு சீடைகளாக உருட்டி வைக்கவும். ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
மாவை வறுப்பதால் சீடை வெடிக்காமல் இருக்கும்.

காரத்தட்டை
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்த மாவு, வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 5, நறுக்கிய கொத்தமல்லி - சிறிது, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசிமாவை கை பொறுக்கும் சூட்டில் லேசாக வறுக்கவும். பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வறுத்த அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, உளுத்த மாவு, வெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து வெள்ளைத் துணியில் மெல்லியதாகத் தட்டி எண்ணெயில் போட்டு கரகரப்பாகப் பொரித்தெடுக்கவும்.
விருப்பப்பட்டால் வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.

காசி அல்வா
தேவையானவை: துருவிய வெள்ளைப்பூசணி - 4 கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - கால் கப், முந்திரி துண்டுகள் - சிறிது.
செய்முறை: வெள்ளைப்பூசணி துருவலை ஒரு துணியில் நன்றாக மூட்டை கட்டி, நீரை கெட்டியாகப் பிழிந்து வடித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் நெய் விட்டு, பூசணி துருவலைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி சர்க்கரையை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து சுருண்டு வரும் பக்குவத்தில் ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகளை சேர்த்து இறக்கவும்.

மனோகரம்
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசிமாவு - 4 கப், வறுத்துப் பொடித்த உளுத்தமாவு - முக்கால் கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன். உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசிமாவுடன் உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசறி, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சிறிது எடுத்து தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெயில் முறுக்குகளாகப் பொரித்தெடுக்கவும். இதேபோல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.

மற்றொரு கடாயில் வெல்லத்தைப் போட்டு ஒரு கரண்டி தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கொதித்து கரைந்ததும் அதில் உள்ள மண்ணை வடிகட்டி மீண்டும் கடாயில் வைத்து கெட்டிப் பாகாகக் காய்ச்சவும் (ஒரு ஸ்பூனில் எடுத்து தண்ணீரில் போட்டு, அந்த முத்தை எடுத்துத் தட்டில் போட்டால் 'டங்' என்று சத்தம் கேட்கும். இதுவே சரியான பதம்). பிறகு அடுப்பை அணைத்து விட்டு, பொரித்த முறுக்குகளை போட்டு கலந்து வைக்கவும்.

thanks to Aval Vikatan

No comments: